Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை ஆர்.ஏ.புரம் குடியிருப்பு அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து இறந்தவருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில், அரசு நிலத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 60 வயதுமிக்க கண்ணையா என்ற நபர் ஒருவர் அவரது வீடு இடிக்கப்படுவதை கண்டித்து தீடிரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே சம்பவ இடத்தில் இருந்த போலீஸார் கண்ணையாவை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீக்குளித்த முதியவர் கண்ணையா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "மந்தவெளி, மயிலாப்பூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டி வரும் வீடுகளில், ஆர்.ஏ.புரம் மக்கள் மறு குடியேற்றம் செய்யப்படுவார்கள்.வரும் காலங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டிய தேவை ஏற்படின், மறு குடியேற்றம் தொடர்பாக முன்கூட்டியே சம்மந்தப்பட்ட மக்களுடன் கலந்தாலோசித்து, மறு குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை ஆர்.ஏ புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த கண்ணையனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.